இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசா அற்ற அனுமதி வசதி ரத்து செய்யப்பட்டமைக்கான முதன்மை காரணம், இலங்கை பிரஜைகள் தாய்லாந்தில் மேற்கொண்ட சட்டவிரோத செயல்களே ஆகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இலங்கை பிரஜைகள் தாய்லாந்தில் புரிந்த பல்வேறு சட்டவிரோத செயல்கள் காரணமாகவே இந்த விசா அற்ற அனுமதி வசதி இலங்கைக்கு இழக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தாய்லாந்திற்கு நுழையும் போது விசா அற்ற நுழைவு வசதியை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரத்து செய்ய தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தாய்லாந்து நோக்கிப் பயணிக்கவிருக்கும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்தின் இந்தத் தீர்மானம் குறித்து தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் இலங்கைக்கு அந்த விசா வசதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.




