வரவு செலவு திட்டம் நேரலை
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூற முடியாது.
தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டியுள்ள தேவையுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர் வரியை விதிக்க முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் இலங்கையின் கடன்பெறுதல் வரையறையை 3,740 பில்லியன் ரூபாவாக 60 பில்லியன் ரூபாயினால் குறைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட அறவீட்டை நீக்கி அதற்கு பதிலாக பெறுமதி சேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவானது 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 8 மணிநேரம் கடமை நேரத்திற்கு வழங்கப்படும் 7,500 மாதாந்த குறைந்தபட்ச கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்குவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல்இ தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக் கருத்திட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 10இ000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15இ000 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் 2இ000 வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 4இ290 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டில் அவசியமாக நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்
அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கான தற்காலிக தீர்வை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி நிலைமாற்றச் சட்டம் அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2030 இல் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக 1இ000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும்.
அதன் மொத்த செலவினம் 12,000 மில்லியன் ரூபாவாகும்.
சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
அதேநேரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.
விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவையை ஸ்தாபிக்கப்படும்.
2026ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.
பிரஜைகளின் தரவுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
கிவ் ஆர் குறியீடுக்காக 5000க்கு குறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும் என தெரிவித்தார்.
AI தரவு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காக இணைய சேவை வவுச்சர் வழங்கப்படும்.
டிஜிட்டல் தொழில்நுட்ப கோபுரங்களை அமைப்பதற்கு முதலீட்டு வரியை 5 வருடங்களுக்கு இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 6500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு எமது பொருளாதார கொள்கையின் பிரதான அம்சமாகும். சமூக பாதுகாப்பு திட்டம் அடுத்தாண்டு மறுசீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விவசாய அபிவிருத்திக்காக 1700 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான பல்வேறு கடன் வசதிகளுக்காக 80000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரச முறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் மாதத்துக்குள் நிறைவு பெறும் எனவும் நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை இன்று நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.
இதன்போது உரையாற்றுகையில்,
பொருளாதார மீட்சிக்கு எடுத்த சிறந்த தீர்மானங்களால் பெருமைக்கொள்கிறோம். பேரண்ட பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்யவும், நிதி ஒழுக்கத்தை நிலைப்படுத்தவும் கடுமையான எடுத்துள்ளோம். பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர்,
அரச நிதி ஒழுக்கத்தையும்,வெளிப்படைத்தன்மையையும் பேணுவதற்கு சகல அமைச்சுகளுக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நீதித்துறை சேவைக்கான ஒழுக்க விதிகளை உருவாக்குவதற்கு விசேட குழு நியமிக்கப்படும் என தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்ட உரை என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.