யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி : தாய்மாமன் கைது
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரும்பாலை, கோப்பாய் கிழக்கு சேர்ந்த எனும் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்:
கடந்த நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில், நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு வந்த நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது, குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவரது உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, கண்டல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின் போது அதிர்ச்சிமிக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனேயே வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 8ஆம் திகதி இவர் சகோதரிக்குச் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், யுவதியின் தாயின் தம்பி (தாய்மாமன்) பச்சை பனை மட்டையால் யுவதியை கடுமையாகத் தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் குறித்த யுவதிக்கு நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்தவர்கள், குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து திரும்பிச் சென்றனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், யுவதியின் தாய்மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளராக கடமை புரியும் நபரை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.