சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் தீர்ப்பு
மன்னார், அடம்பன் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
மன்னார், அடம்பன் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் குற்றம், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி. எம். மிஹால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் இனங்காணப்பட்டார். தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி, ‘இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்” கடுமையாக வலியுறுத்தினார்.
மேலும், ‘எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறை தண்டனை வழங்க வேண்டும்” எனவும், ‘கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும்” மன்றை அவர் கோரினார்.
அரச சட்டவாதியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.