பொலிஸாரை மிரட்டிய நபருக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றில் நிலுவை
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிஸாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிஸாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது, ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர்.
குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன், நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற வேளை, வாளினை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட போது இளைஞனை பொலிஸார் மடக்கி பிடித்து, கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர்.
மேலதிக விசாரணைகளில், யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.