மீட்டியாகொட துப்பாக்கி சூட்டு சம்பவம் : தொடர்புடைய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
மீட்டியாகொட, கிரலகஹவெல பகுதியில் உள்ள உணவகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டு
மீடியாகொட, கிரலகஹவெல பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, படபொல – பத்தேகம வீதியில் அம்பேகம அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மீடியாகொட, கிரலகஹவெல பிரதேச உணவகம் ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரே உணவகத்தின் காசாளராகக் கடமையாற்றிய பெண் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அப்பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீடியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்காக பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் சந்தேகிப்பதுடன், இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.