காதலனின் நகைகளை திருடிய காதலி கைது!

சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய

Published November 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்தது. இந்நிலையில் காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்.

அந்தவகையில் கடந்த 5ஆம் திகதி காதலனின் வீட்டில் காதலனின் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட்ட 8 பவுண் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக 17 திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

அந்தவகையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி சாவகச்சேரியில் உள்ள குறித்த வீட்டில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த காதலி, டிக்டொக் சமுக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும், மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே போன்று அண்மைய நாட்களில் வேறு சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *