சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு : தொடரும் கனமழை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அமுலில் இருக்கும் சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அமுலில் இருக்கும் சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் வரை சீரற்ற வானிலை நீடிக்கும் சாத்தியமிருப்பதால் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய வானிலை சிவப்பு எச்சரிக்கை இன்று இரவு 10.30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென் கிழக்கு திசையிலிருந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கடற்பகுதிகளில் தென் கிழக்கு முதல் வட கிழக்கு வரையான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலி, களுத்துறை, கொழும்பு, புத்தளம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில், கடல் அலைகளின் உயரம் சாதாரண நிலையை விட 2.5 முதல் 3.5 மீட்டர் வரை உயரும் அபாயம் காணப்படுகிறது.
இதேவேளை கடல்சார் நடவடிக்கைகளில் டுபடுவோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய மலைநாடு உட்பட உயரமான அல்லது அபாயகரமான சரிவுகளில் வசிப்பவர்கள் விசேட அவதானத்துடன் இருக்க வேண்டும். மக்கள் தமது பாதுகாப்புக் குறித்து உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.