இந்திய பிரதமர் ஜனாதிபதி அநுரவுடன் தொலைபேசியில் உரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடலை மேற்கொண்டார்.
‘திட்வா’ சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இந்தியப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இலங்கை மக்களுடன் உறுதுணையாக நிற்பார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்தியப் பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தின் பின்னர் இந்தியா வழங்கிய ஆதரவுக்காகவும், மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியதற்காகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் செயற்படுத்தப்படும் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் இந்தியப் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.