கத்தோலிக்கர்களிடம் பேராயர் முன்வைத்த கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தங்களினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்புகளை
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தங்களினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாடுவதை கத்தோலிக்கர்கள் தவிர்க்க வேண்டுமென பேராயர் மெல்கம் ரஞ்சித் கருதினால் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பலர் தமது குடியிருப்புகளை இழந்துள்ளதுடன், தமது அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தாம் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு உடைகள் இன்றி நிர்க்கதியாகியுள்ளனர்.
இவ்வாறான சூழலில் ஆடம்பரமாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் மகிழ்ச்சி, ஆடம்பரம் அல்லது தேவையற்ற வீண் செலவுகளுடன் கூடிய கொண்டாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கத்தோலிக்க சமூகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகை உண்மையில் எளிமையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். அவரது பிறப்பு மிகவும் எளிமையானது.
இதனால் அவரின் பிறப்பை வரவேற்கத் தயாராகும் கிறிஸ்தவர்களும் எளிமையுடன் அதனை கொண்டாடுவது சிறந்தது என பேராயர் மெல்கம் ரஞ்சித் கருதினால் ஆண்டகை தெரிவித்துள்ளார்.