கொரோனா வைரஸ் – விழிப்புணர்வில் ஈடுபட்ட வைத்தியர் மீது தாக்குதல்

0

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை ) பிற்பகல், நல்லூரிலுள்ள பிரபல ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஐஸ்கிறீம் விற்பனை நிலைய பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியர் நந்தகுமார் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் ஆகியோர் நேற்று பிற்பகல் கோரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் குறித்த ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.

அங்கு சென்ற வைத்தியரும் ஊழியர் சங்கத் தலைவரும், குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை ஐஸ்கிறீம் விற்பனை நிலைய விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்திய நந்தகுமார், த.சிவரூபன் ஆகியோர் அங்கு காத்திருந்தார்.

இதன்போது ஐஸ்கிறீம் விற்பனைநிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தியதுடன் கற்களாலும் எறிந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பாக வைத்தியரும் ஊழியர் சங்கத் தலைவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.