கனமழை எச்சரிக்கை: பல மாகாணங்களில் மழை அதிகரிக்கும்.
எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதேநேரம், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளைகளில் மூடுபனி நிலவ வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியதால், ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.