திருகோணமலையில் தீவிரமடையும் கடலரிப்பு
திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் அதிக சீற்றம் காரணமாக ...
திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் அதிக சீற்றம் காரணமாக கரையோரப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் கடலரிப்புக்கு உள்ளாகி தாழிறங்கி வருகின்றன. அந்தவகையில் வீரநகர் பகுதியில் மற்றுமொரு ஏகாம்பரம் வீதி சொலமன்ஸ் மீனவ கூட்டுறவுச் சங்க கட்டடம் கடலரிப்புக்கு உள்ளாகி வெடிப்புகள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
குறித்த கட்டடத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகம், கடற்றொழிலாளர் சேமிப்பு வங்கி என்பன இயங்கி வருகின்றன.
அத்துடன் வீரநகர் பகுதியில் 4ற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இதுவரை தாழிறங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதியில் கடலரிப்பை குறைப்பதற்காக கற்கள் போடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.
வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக திருகோணமலை கடற்பகுதியானது மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. மீனவர்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொழிலுக்கு செல்லாமல் இருக்கின்றார்கள்.
திருகோணமலை டொக்கியாட் கடற்பகுதியில் சிவப்புக் கொடி பறக்கவிடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்தாம் குறிச்சி, வீரநகர், திருக்கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களுடைய படகுகளை வீதிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றார்கள்.