ஈரான் ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கடமையில் ஈட்டுபட்டுள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சில அரச ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரானில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் வரை பலியானதாக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10,600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சூழலில், ஈரானின் சட்டமா அதிபர் மொஹமட் மொவாஹிதி அசாத் அரச தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.