வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடிகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது
ரூபாய் 20 இலட்சத்து 38 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடித்
ரூபாய் 20 இலட்சத்து 38 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடித் தொகுதியை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை விமான நிலைய போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மத்துகம, வலல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் இயந்திரம் திருத்துபவர் (Motor Mechanic) ஆவார்.
இவர் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ (IndiGo) விமான சேவைக்கு சொந்தமான 6E-1173 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்திருந்த 4 பயணப் பொதிகளுக்குள் பொம்மைகள், சேலைகள் மற்றும் சட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,000 ‘மென்செஸ்டர்’ (Manchester) ரக வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 60 கார்டன்களும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 23,800 ‘செய்யது’ (Seyadu) ரக பீடிகள் அடங்கிய 19 கட்டுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.