சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோகக் காணொளி: சந்தேகநபர் கைது
சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி...
சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 43 வயதுடைய பொரளை, பெயார்பீல்ட் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபருக்கு உதவியளித்த மற்றும் பொலிஸாருக்கு சாட்சியங்களை மறைத்த எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இரண்டு நபர்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, பிரபல வர்த்தகரான சந்தேக நபர் தனது வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரை, குழுவினர் முன்னிலையில் அந்த வீட்டிலேயே நிர்வாணமாக்கி அதனை காணொளி எடுத்து வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் தொடர்பாக பொலிஸார் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டுப் பயணத் தடையையும் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், சந்தேக நபர் சம்பவத்தின் பின்னர் பொலிஸாருக்குத் தெரியாமல் பிரபல ஹோட்டல்கள் சிலவற்றில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.