மனுஷ நாணயக்காரவின் அடிப்படை உரிமை மனு வாபஸ்

கொரிய விசா விவகாரம் தொடர்பாகத் தன்னைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால்

Published January 20, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

கொரிய விசா விவகாரம் தொடர்பாகத் தன்னைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனது கட்சிக்காரரை தற்போதைய நிலையில் கைது செய்யப்போவதில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக, இந்த மனுவை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த அவர், அதனை மீளப்பெற அனுமதி கோரினார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான லக்மாலி கருணாநாயக்க, இந்த வழக்கு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மனுவை மீளப்பெறுவதற்கு அனுமதி வழங்கியது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *