1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் ...

Published January 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

 இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை  பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட  வாகனம் மற்றும்  படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய  மூவரை கைது செய்த திருப்புல்லாணி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கை மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலை பண்டல்கள், ஐஸ் போதை பொருள், ஹெராயின், கஞ்சா ஆயில் உள்ளிட்ட  பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருவதால் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கடற் படையினர் மற்றும் கடலோரப் பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறை , மரைன் பொலிசார் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்புல்லாணி காவல் ஆய்வாளருக்கு திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலை பண்டல்கள் கடத்த இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இன்று  அதிகாலை சுமார் 2 மணி அளவில் திருப்புல்லாணி காவல் ஆய்வாளர்,  தனிப்பிரிவு பொலிசாருடன் இணைந்து அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது சரக்கு வாகனங்களில் இருந்து  படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை பண்டல்களை  ஏற்றி கொண்டிருந்ததை கண்ட பொலிசார் அவர்களை மடக்கி பிடித்து  37 மூட்டைகளில் இருந்து  1600 கிலோ பீடி இலை பண்டல்கள்  வாகனம் மற்றும்  படகு ஆகியவற்றை  பறிமுதல் செய்ததுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய   மூவரையும் கைது செய்து திருப்புல்லாணி காவல் நிலையம் அழைத்து சென்று  விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்புல்லாணி பொலிசாரின் விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம், பைபர் படகு மற்றும் பீடி இலை பண்டல்கள் கீழக்கரை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *