78வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க மலையக அரசியல் அரங்கம் அழைப்பு
இலங்கை அந்நியராட்சியில் விடுபட்டு சுதந்திர நாடான போதும்; மலையகத் தமிழ் மக்களை
இலங்கை அந்நியராட்சியில் விடுபட்டு சுதந்திர நாடான போதும், மலையகத் தமிழ் மக்களை அந்நியராகப் பார்க்கும் மனநிலையே இலங்கைக்குள் காணப்படுகிறது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
2026 ஜனவரி 24ஆம் திகதி இடம்பெற்ற மலையக அரசியல் அரங்கத்தின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைய தித்வா புயல் அனர்த்தத்தின் பின்னதான மீட்பு, மீள்கட்டுமான நடவடிக்கைகளில் அவை தெளிவாக வெளிப்படுகிறது. இலங்கை அரசு அறிவித்துள்ள மீட்பு நிவாரணங்கள் முதல் மீள்கட்டமைப்பு அறிவிப்புகள் வரை மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்தப் புறக்கணிப்பை எடுத்துக்காட்டும் பொருட்டும், மலையகத் தமிழ் மக்களையும் இலங்கையர்களாக இணைத்து மீள்கட்டுமான, அபிவிருத்தியை முன்னெடுக்க வலியுறுத்தியும் மலையகப் பகுதிகளில் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களில் நின்று “நாங்களும் இலங்கையர்களே” என இலங்கை தேசியக் கொடியை ஏற்றி 78வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க மலையக அரசியல் அரங்கம் அழைப்பு விடுக்கின்றது.
மலையகத்தில் தித்வா அனர்த்தம் இடம்பெற்ற இடங்களில், ஒன்றுசேரக்கூடிய மக்கள் இலங்கை நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி ‘நாமும் இலஙகையரே’ எனும் கோஷத்தை உரத்து வலியுறுத்திக் கூறுவதன் மூலம் நாட்டு மக்களினதும், அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தைப் பெறுதல் வேண்டும்.
இந்த முன்மொழிவை மலையக அரசியல் அரங்கம் முன்வைக்கின்ற போதும், இந்த எண்ணக்கருவை வலியுறுத்த விரும்பும் யாவரும் சுயாதீனமான குழுக்களாகவோ அல்லது தமது அமைப்புகள் சார்ந்தோ முன்னெடுப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இந்த எண்ணக்கருவின் மூலம் “நாமும் இலங்கையரே” “எங்கள் மீது பாரபட்சம் காட்டாதீர்கள்” எனும் கோரிக்கையை பொதுவெளியில் முன்வைப்பதே அடிப்படையாகும்.
இந்த எண்ணக்கருவையும் செயன்முறையையும் முன்னெடுக்கும் வகையில் இந்தத் தகவலை பரவலடையச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஊடகங்களையும் சமூக ஊடகத் தளங்களையும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.