ஷிரந்தி மற்றும் நாமல் இன்று விசாரணைப் பிரிவுகளில் முன்னிலையாக உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (03) வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 27ஆம் திகதி அவரை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என தனது சட்டத்தரணி ஊடாக அவர் அறிவித்திருந்தார்.
இதற்காக இரண்டு வார கால அவகாசத்தை அவர் கோரியிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட அழைப்பின் போது அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால், மற்றுமொரு திகதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இன்றைய தினம் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.