மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்தொழில்

Published February 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்தொழில் முன்னெடுப்போர் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் பெருளமானோர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக கரை வலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் நீண்டகாலமாக கடல்தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதுடன் தற்போது உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதனால் மீனவர்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

உழவு இயந்திரம் மூலம் வலைகள் இழுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேண்டாம் வேண்டாம் மீனவர்களின் தற்கொலைக்கு காரணமாக வேண்டாம்,வாழவிடு வாழவிடு கரைவலை மீனவர்களை வாழவிடு, நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் மீனவர்கள் கற்காலத்திற்கே திரும்ப வேண்டுமா?, மீனவர்களின் அவலநிலை உங்களுக்கு தெரியவில்லையா? போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மீனவர் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உரிய திணைக்களத்தினை தலைவரின் தலைவருக்கும் கொண்டுசெல்லப்பட்டதுடன் அதற்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது அவரினால் தெரிவிக்கப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.