மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

0

மேல் மாகாணத்தில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று பரவல் குறித்து நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் முடிந்தவரை தமது வீடுகளிலேயே இருக்குமாறும் இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொது மக்கள் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 2ஆம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை, கொத்தட்டுவை, முல்லேரியா, மருதானை, தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.