பயணப் பையில் 4 கிலோ குஷ் போதைப்பொருள் சந்தேக நபர் கைது
4 கோடியே 64 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் ......
4 கோடியே 64 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டு வந்து, அதனை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட இலங்கை பயணி ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்தப் போதைப்பொருள் தொகையைத் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, அபுதாபி நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையில் 4 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 கிலோ 642 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேக நபரை இன்று (06) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.