கட்டளையை மீறிச்சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடையில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொறி
அம்பலாங்கொடையில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நீண்ட தூர துரத்தலின் பின்னர், வந்ததூவ (Wandaduwa) பகுதியில் வைத்து குறித்த லொறி தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று காலை அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்ததொல (Andadola) பகுதியில், விசேட மோட்டார் சைக்கிள் பிரிவினர் வீதிப் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அம்பலாங்கொடை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டினர். எனினும், ஓட்டுநர் நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து, பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் சென்று வந்ததூவ பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி லொறியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லொறியைச் சோதனையிட்டபோது, அதில் 10 எருமைகள் மற்றும் 4 பசு மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு எருமை ஏற்கனவே அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அத்துடன், லொறியில் இருந்தவர்களிடமிருந்து 5,200 மில்லி கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக 42 மற்றும் 46 வயதுடைய அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறியின் ஓட்டுநரும் மற்றொரு சந்தேகநபரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.