கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு – சாரதி பலி
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லப்பிட்டி சந்தியில், பொலிஸாரின் கட்டளையை
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லப்பிட்டி சந்தியில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (10) அதிகாலை சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அதனைப் பொருட்படுத்தாது மந்திகை நோக்கி வேன் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வீதி மறியல் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. ஜீப் வண்டி ஊடாக வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் தப்பியோடியதால் பொலிஸார் வாகனத்தை நோக்கி முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எனினும், வேன் நிறுத்தப்படாத நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வேனின் சாரதி காயமடைந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வேனின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்ததோடு, அதில் பயணித்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.