மின்சார சபை தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான

Published February 10, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 8 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில், மீண்டும் அக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரி நேற்றைய தினம் (09) அமைச்சருக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், அவற்றை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர ஊழியர்களுக்கு வேறு வழியில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *