விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 918 பேர் கைது
நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய
நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 918 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 09 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 924 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 402 கிராம் ஹெரோயின், 361 கிராம் ஐஸ், 01 கிலோகிராம் 143 கிராம் கஞ்சா, 18,180 கஞ்சா செடிகள், 16 கிலோகிராம் 401 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 47 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 535 போதை மாத்திரைகள், 548 கிராம் 120 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 98 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.