கலன்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள்

Published March 1, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், குறித்த எரிபொருட்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இந்நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்குத் தடையாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

நாங்கள் இதனைப் பொறுப்புடன் கூறுகிறோம். எனவே, எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இன்று (01) நாங்கள் எரிபொருள் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருக்கவில்லை. எனினும், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதால், விநியோகப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களையும் நாம் பணிக்கு அழைத்துள்ளோம்.

தற்போது எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை (02) பௌர்ணமி தினமாக இருந்தாலும், எரிபொருள் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் கலன்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

யாராவது கலன்களில் எரிபொருளைப் பெற்றுச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *