ஒன்லைன் கொடுப்பனவு வசதி அறிமுகம்!

அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மற்றுமொரு நிலையான

Published February 2, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 4 min read

அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மற்றுமொரு நிலையான முன்னேற்றமாக, நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், புதிய ஒன்லைன் கொடுப்பனவு சேவை 2026.02.02 அன்று பேலியகொடை மெனிங் பொது வர்த்தக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன் மூலம் பேலியகொடை மெனிங் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,400 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் https://fmis.uda.lk/login தளம் ஊடாக govpay கட்டமைப்பு மூலம் தமது கொடுப்பனவுகளை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

மேலும், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீட்டுத் திட்டங்களில் வசிக்கும் 13,500 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் நீர், மின்சாரம் மற்றும் மதிப்பீட்டு வரிகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை இந்த டிஜிட்டல் தளம் ஊடாக செலுத்துவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

“ஒரு வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானது. காலம் பொன் போன்றது. எனவே, தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் எளிதான கொடுப்பனவு முறையை நோக்கி தொழில்நுட்பத்துடன் முன்னேறுவது காலத்தின் தேவையாகும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தேசிய திட்டங்களில் ஒன்றாக இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மெனிங் வர்த்தக வளாகத்தின் பரபரப்பான வர்த்தகர்களுக்கு எந்த நேரத்திலும், எங்கிருந்தும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதி இப்போது கிடைத்துள்ளது.

மொத்த மற்றும் சில்லறை வணிகத்தில் நேர மேலாண்மை வணிக வளர்ச்சியை பாதிக்கும். தொழில்நுட்பம் சேவைகளை வினைத்திறனாக்குகிறது.

இன்று பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த இந்த முறையைப் பின்பற்றுவது அவசியம்.” என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நகர்ப்புற அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் எம்.ஜி. ஹேமச்சந்திர மற்றும் பணிப்பாளர் நாயகம் மனோஜ் பெரேரா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *