நாணய சுழற்சியில் வென்ற இத்தாலி பந்துவீச்சு தேர்வு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில் இத்தாலி மற்றும்

Published February 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று (19) பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (19) காலை ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணித் தலைவர் ஹாரி மனென்டி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி நடப்புத் தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.

அத்துடன், ‘குரூப் சி’ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஏற்கனவே ‘சுப்பர் 8’ சுற்றுக்கான தகுதியையும் உறுதி செய்துள்ளது.

மறுபுறம், டி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாகக் களமிறங்கியுள்ள இத்தாலி அணி, தொடரிலிருந்து வெளியேறியிருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுக்களால் வரலாற்று வெற்றி பெற்ற இத்தாலி, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 203 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டும்போது 178 ஓட்டங்களைக் குவித்து கடும் நெருக்கடி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது வெற்றிப் பயணத்தை 4-0 எனத் தொடர முயற்சிக்கும். அதேவேளை, இத்தாலி அணி எந்தவித அழுத்தமுமின்றி சுதந்திரமாக விளையாடி, தனது கன்னி உலகக் கிண்ணப் பயணத்தை ஒரு சிறந்த ஆட்டத்துடன் நிறைவு செய்யக் காத்திருக்கிறது. கொல்கத்தா மைதானம் துடுப்பாட்டத்திற்குச் சாதகமானது என்பதால் இப்போட்டியில் ஓட்ட மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *