எரிசக்தி அமைச்சர் மீது சானக குற்றச்சாட்டு

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான அறிக்கையை வெளியிடுவதைத் தடுப்பதற்கு எரிசக்தி அமைச்சர் முயற்சிப்பதாக டி.வி. சானக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அமைச்சர் நுரைச்சோலை மின்சார உற்பத்தி நிலையத்தில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட சானக்க, நிலக்கரி தொடர்பான முறைகேடுகளை மறைக்கவே அவர் அங்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஜனவரி மாதமே இது தொடர்பான ஆரம்பகட்ட அறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அமைச்சர் பல மாதங்களாக அங்கு செல்லவில்லை.
தற்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னரே அவர் அங்கு சென்று அறிக்கையை முடக்க முயல்கிறார் என சானக தெரிவித்துள்ளார்.
இந்த நிலக்கரி விவகாரம் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு பாரிய மோசடி என வர்ணித்த டி.வி. சானக்க, இதனால் நாடு கடும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின்சார உற்பத்தித் திறன் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்கள் மின்சாரத்திற்காக மின் பிறப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்” என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
முன்னைய ஊழல் வழக்கு: உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவினால் அமைச்சருக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




