‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது’ அநுரகுமாரவின் திடுக்கிடும் பதில்!

நாட்டின் உழைக்கும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு மக்கள் அரசாங்கமாக தற்போதைய அரசு திகழ்வதாகவும், சில சிறிய குழுக்களின் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” என்ற தொனிப்பொருளில் நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தால் பெருந்தோட்டத் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர் வீடுகள் பலவும் சேதமடைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை பாதுகாப்பது மக்களே என்றும், மக்களின் பலமான நம்பிக்கையினாலேயே அரசு இன்றும் உறுதியாக நிலைத்திருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், 10 முதல் 15 பேர் கொண்ட சில சிறிய குழுக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புமாறு தொடர்ந்து கூறி வருவதாகவும், மக்கள் நம்பிக்கையை பெற்ற அரசாங்கத்தை இத்தகைய குழுக்களின் கூச்சலால் வீழ்த்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் மக்களின் நம்பிக்கையுடன் பலமாக இருந்து, மக்களின் நலனுக்காகவே தொடர்ந்தும் செயற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேவேளை, அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தாலும் கூட அரை பகுதி மக்களின் ஆதரவையும் திரட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.




