ஆளுநருடன் மீண்டும் சந்திப்பு கோரிய TVK தலைவர் விஜய்!

தமிழ் நாட்டு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்த விஜய், தனது கட்சியின் 108 உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலைச் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
எனினும், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.
இதனடிப்படையில், 118 உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுப் பட்டியலைச் சமர்ப்பித்தால் மாத்திரமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் இன்று நடைபெறவிருந்த விஜயின் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான மேலதிக நகர்வுகள் குறித்து விளக்குவதற்காக ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கோரியுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் ஆளுநரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் அனுமதி வழங்கும் பட்சத்தில், விஜய் இன்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்துத் தனது அடுத்தகட்ட விளக்கங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படும் இந்த ஆட்சி அமைக்கும் முயற்சி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




