ரூ.46.5 இலட்சம் மதிப்புள்ள சீன சிகரெட்டுகள் சுங்கத்தினரால் பறிமுதல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், அறிவிப்பு எதுவும் தேவையில்லாத ‘பசுமை வழித்தடம்’ ஊடாக ரூபாய் 46 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவையின் TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்திருந்த இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 155 அட்டைப் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மொத்த பெறுமதி ரூபாய் 46,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




