மக்கள் அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது – ஜனாதிபதி

மக்களுக்குப் பொறுப்புக்கூறும் மக்களின் அரசாங்கமான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்வித தேவையுமில்லை எனவும், அதற்காக திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களே கனவு காண்கின்றனர் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் செய்த ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது கலக்கமடைந்து, பல்வேறு பொய்ப் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர் என்றும், எனினும் தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை மேலும் வென்று முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாத்தறையில் வெள்ளப் பெருக்கினால் 2019 – 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மக்களின் அரசாங்கமும், ஒழுக்கமான வலுவான பொருளாதாரமும் தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், வரலாற்றில் இல்லாத வகையில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிந்துள்ளது. ‘ஏதேனும் சேதம் ஏற்பட்ட குறுகிய காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
மக்களின் இவ்வாறான உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேவேளை, அவர்களின் பொருளாதாரத்தை படிப்படியாக வலுப்படுத்தி, தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கச் செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
சிறு வணிகர்களுக்குக் கடன் வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் 90,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டிற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பின்னர், பல முக்கியமான பொருளாதாரக் காரணிகளில் நாடு தற்போது உயர் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பொருளாதாரத் தரவுகள் மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு சுலபமாகிறது என்பதைக் கொண்டே நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரதிபலிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




