கொழும்பில் தானசாலைகளுக்கு சுகாதார கண்காணிப்பு!

இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மே 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 464 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் டெஹான் வித்தானகே தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தானசாலைகளில், 91 தானசாலைகள் சோறு விநியோகிக்கும் தானசாலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே இந்தத் தானசாலைகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தானசாலைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொது சுகாதார அதிகாரிகளினால் விசேட சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதன்படி தானசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான தயாரிப்புப் பணிகள் ,தானசாலைகள் நடைபெறும் காலப்பகுதி,தானசாலைகள் நிறைவடைந்த பின்னரான துப்பரவுப் பணிகள் ஆகிய மூன்று கட்டங்களிலும் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பரிசோதகர்களினால் கடுமையான கள ஆய்வுகளும் கண்காணிப்புகளும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.




