ரசிகர்கள் மோதலால் போர்க்களமான பாரிஸ் வீதிகள்!

ஐரோப்பிய செம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 400க்கும் அதிகமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்கேரியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியை வீழ்த்தி பிஎஸ்ஜி அணி செம்பியன் பட்டம் வென்றதை அடுத்தே இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.
இறுதிப் போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்செனல் அணியை வீழ்த்திய பிஎஸ்ஜி அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் செம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
வெற்றிச் செய்தியை அடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் திரண்ட ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது ஏற்பட்ட மோதல்களில் 7 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், பல வாகனங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் வன்முறைக் குழுவினரால் சேதமாக்கப்பட்டுள்ளன.
நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இறுதிப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரும் ரசிகர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஆங்காங்கே மோதல்கள் பதிவாகியிருந்ததாக பிபிசி – சர்வதேச செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.




