“மாகாண சபை தேர்தல்: அரசுக்கு புதிய அழுத்தம்!”

மாகாண சபை தேர்தலை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர்களின் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில், தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால் மாகாண சபைகள் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் மாகாண சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக மாகாண சபைகள் ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்த நிலைமை மாகாண நிர்வாகத்தின் செயல்திறனை பாதித்துள்ளதுடன், ஜனநாயக பிரதிநிதித்துவமும் குறைந்துள்ளதாக ஆளுநர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நிர்வாகத்தை மீண்டும் நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் எந்தவொரு கட்சியின் செயலாளருக்கும் இல்லை என்றும், தேர்தல் தொடர்பான முடிவுகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆளுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
மாகாண சபை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரை தெளிவான அறிவிப்பொன்றை வெளியிடாத நிலையில், ஆளுநர்களின் சங்கத்தின் இந்தக் கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.




