தன்சல் பெற காத்திருந்தோருக்கு நேர்ந்த துயரம்; மீகொடையில் 6 உயிர்கள் பலி!

வைகாசி பௌர்ணமி தினத்தில் மீகொடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்சல் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், மீகொடை பகுதியில் நடைபெற்ற தன்சல் நிகழ்வுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது திடீரென மோதியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்துக்குப் பின்னர் சாரதி தப்பிச் சென்றிருந்த போதிலும், கொடகம சந்தி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




