இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதத்தில் மட்டும் 8,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட நிபுணர் மருத்துவர் துஷானி தாபரே தெரிவித்துள்ளார்.
டெங்கு தொற்றாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 72 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேவேளை, தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சபரகமுவ மாகாணத்தில் 9 சதவீதமும் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




