எரிபொருள் விலை உயர்வால் மக்கள் சுமை அதிகரிப்பு.

நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியில் இடம்பெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் மற்றும் முறையற்ற நிர்வாகமே எரிபொருள் விலை உயர்வுக்கு நேரடி காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி காரணமாக மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக 7 இலட்சம் முதல் 8 இலட்சம் லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த தவறுகளுக்கான சுமையை, எரிபொருள் விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீது அரசாங்கம் சுமத்துவதாகவும் அவர் சாடினார்.
மாகாண சபைகளின் அதிகாரம் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்குப் பதிலாக தேர்தலை நடத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்களை வழங்குவதே சிறந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் ஊழல்களையும், நிர்வாகத் திறமையின்மையையும் எதிர்க்கட்சி தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.




