தீயில் சிக்கிய முதியோர் பராமரிப்பு நிலையம்!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த தீ விபத்து, ‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ எனப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நிலையத்தில் சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த 7 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயினால் கருகிய நிலையில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், கட்டிடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த நிலையத்தில் மனநலக் குறைபாடுகளைக் கொண்டவர்களும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.




