டொலர் உயர்வு தாக்கம்: மருந்து விலைகளும் அதிகரிக்குமா?

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், நாட்டில் சில மருந்துகளின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துகளின் விலைகளை மறுஆய்வு செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 60 மருந்து வகைகளின் விலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது என்றும், குறிப்பிட்ட சில மருந்துகளுக்கே இந்த மாற்றம் பொருந்தும் என்றும் அதிகாரசபை விளக்கம் அளித்துள்ளது.




