புதிய இறைவரி திருத்தச் சட்டத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் முக்கிய திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன உத்தியோகபூர்வ சான்றொப்பம் வழங்கியுள்ளார்.
கடந்த மே மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர், திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம் தற்போது 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது.
புதிய சட்டத்தின் மூலம் வரி நிர்வாக முறைகளை நவீனப்படுத்துதல், வரி விதிமுறைகளின் தெளிவை மேம்படுத்துதல் மற்றும் வரிச் சட்டங்களின் அமுலாக்கத்தை மேலும் வலுப்படுத்துதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், வரி மதிப்பீட்டு நடைமுறைகளை துல்லியப்படுத்துவதுடன், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சில வரி விலக்குகளும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் எனப்படும் TIN சான்றிதழைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான வரி விலக்குகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பணமோசடி மற்றும் நிதி முறைகேடுகளைத் தடுக்க அதிகாரிகளின் தகவல் அணுகல் மற்றும் கண்காணிப்பு அதிகாரங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய சட்டம், நாட்டின் வரி நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும் திறம்பட செயல்படக்கூடியதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.




