சுரேஷ் சலே விவகாரம்: CID-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சுரேஷ் சலேவின் குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் இந்த வாரத்திற்குள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், ஆணைக்குழு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று சுரேஷ் சலேயிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததுடன், அவருடன் அருகிலிருந்த தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரிடமிருந்தும் தகவல்களை சேகரித்துள்ளனர்.
அதேவேளை, சுரேஷ் சலேயின் உடல்நிலை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அன்றைய தினம் வர இயலாது என தெரிவித்து மாற்று திகதி கோரியிருந்த நிலையில், புதிய திகதியின்படி இந்த வாரத்திற்குள் ஆஜராகுமாறு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




