எல்-நினோ, லா-நினா சவால்களுக்கு அவசர செயலணி கோரிக்கை!

நாட்டில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El Niño) மற்றும் லா-நினா (La Niña) காலநிலை மாற்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக, விரைவான ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை முன்வைத்துள்ளார்.
இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்,
“சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் (NOAA) கணிப்புகளின்படி, கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்வதால் ‘சூப்பர் எல்-நினோ’ நிலைமை ஏற்படுவதற்கு 63% சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகக் கடுமையான வறட்சி அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர காலநிலை மாற்றங்களை நாடு எதிர்கொள்ள நேரிடலாம்.”
கடந்த ஏப்ரல் 7ஆம் திகதியே காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தில் அரச நிறுவனங்களின் நிபுணர்களை அழைத்து இது குறித்து முதன்முதலாகத் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாயம், நீர் முகாமைத்துவம் மற்றும் வனவிலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏற்படும் ‘லா-நினா’ நிலைமையால் எதிர்பாராத கனமழை பெய்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீர் தட்டுப்பாடு அதிகரிப்பதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.




