புதிய டெங்கு வைரஸ் பரவல்: இலங்கைக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றுக்குப் பின்னால், மரபணு மாற்றத்திற்குள்ளான புதிய டெங்கு வைரஸ் வகை இருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த வைரஸ் வகை இதற்கு முன்னர் இலங்கையில் பரவலாகக் காணப்படாத ஒன்றாக இருப்பதால், பெரும்பாலான மக்களிடம் அதற்கு எதிரான இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, அதிகளவிலான மக்கள் டெங்கு தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதுடன், நோய் பரவும் வேகமும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து, தேவையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ் வகை முந்தைய ஆண்டுகளில் பரவிய வகைகளிலிருந்து வேறுபட்டதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை உடனடியாக அகற்றி, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.




