நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு இந்திய பக்தர்கள் வருகை!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரைச் சேர்ந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா தலைமையிலான ஸ்ரீ இராம பக்தர் குழுவினர் 150 ஆன்மீக பயணிகள் நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (20.06.2026) மாலை 3.30 மணியளவில் வருகை தந்தனர்.
வருகை தந்த பக்தர்கள் ஆலயத்தில் விசேட பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலய வளாகத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தையும் பக்தி பூர்வமாக மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஆலயத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்களால் வருகை தந்த பக்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா மற்றும் அண்மையில் இராமாயண ஆய்வுத் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற பாலா வெங்கட் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக சாந்தகுமார் அவர்கள் செயற்பட்டிருந்தார்.




