வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால், இதுவரை 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் சுமார் 49,000 பேர் வரை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 125 ஆண்டுகளில் வெனிசுலாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாராகுய் (Yaracuy) மாநிலத்தின் சான் பெலிப் (San Felipe) மற்றும் யுமாரே (Yumare) பகுதிகளுக்கு அருகில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கரகஸ் மற்றும் லா குயிரா ஆகிய பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
கராகஸில் உள்ள உயர்தரக் கட்டடங்கள் மற்றும் சான் பெலிப் பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
லா குயிராவில் உள்ள சிமோன் பொலிவார் சர்வதேச வானூர்தி நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வானூர்தி சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பல மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களும் சேதமடைந்துள்ளன.
இதனையடுத்து வெனிசுலா அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மெக்சிகோ, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் மீட்புக் குழுக்களையும், மருத்துவ உதவிகளையும் அனுப்பி வருகின்றன.
அமெரிக்கா மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவி மற்றும் கடற்படை, வான் படை உதவிகளை அறிவித்துள்ளது.
சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதாலும், தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாலும் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.
இதற்கிடையில் 200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிந்திய அதிர்வுகள் பதிவாகியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த துயரமான சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே இருந்த மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டினால் கூடுதல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்




