டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பின் அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
9 நீதிபதிகள் கொண்ட இந்த நீதிபதிகள் குழுவில், டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக 3 நீதிபதிகளும், அதற்கு எதிராக 6 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம், அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கும் 150 ஆண்டுகள் பழமையான சட்டப் பூர்வமான பாரம்பரியத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாக்களின் கீழ் அமெரிக்காவில் தங்கியிருக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை நிறுத்துவதற்கு டிரம்ப் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் நாளான கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதியன்றே இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், டிரம்பின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்க சிவில் உரிமைகள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளையும் தொடர்ந்திருந்தன.
அதன்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்றம், டிரம்ப் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதன்படி, புலம்பெயர்ந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் தற்போதைய நடைமுறை எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து அமலில் இருக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமெரிக்க ஜனாதிபதிக்கு நிச்சயமாக ஏமாற்றத்தை அளித்திருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களைக் கட்டுப்படுத்த அவர் மேலும் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்தத் தீர்ப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.




